Monday, December 3, 2012

நீந்தக் காத்திருக்கும் விண்மீன்


இணையும் புள்ளிகளைப் பொறுத்து
வட்டமென்றும்
சதுரமென்றும்
செவ்வகமென்றும்
அறுங்கோணமென்றும்
அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது
அதனதன்
சுற்றளவு
பரப்பளவுகளை
கணக்கிடுவதே வேலையாயிருந்தது
அளவீடுகள் தப்பிப் போய்ப்
பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்
தேனுண்ட மயக்கத்தில்
திளைத்திருந்த அதன் மென்னுடம்பு
அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று
மந்திரப் பாயில் பயணிப்பது போல
சறுக்கியும்  தவழ்ந்தும்  விரிந்த
அதனுலகில் அலகுகளேதும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை
இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்
எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை
ஒளிபொருந்தியப் பயணமொன்றில்
விண்மீன்கள் நானென்ற  பிரம்மையிலாழ்ந்தேன்
பிரபஞ்சம் சுதந்திரமயமானது
எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்
வடிவங்களற்ற அதனுலகம்
பிடித்துப் போய்  வாழ்க்கை முழுவதற்குமாய்
அதனோடே வாசம் செய்ய
நானுமொரு புள்ளியாய்
வாழ்ந்து மறைய
வலுவானதொரு
காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!